Monday 24 February 2014

பழையாறை கோயிலில் வீரன் தலை மீது சிவன் தாண்டவமாடும் சிற்பம்

தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பழையாறை சோமநாதசுவாமி கோயிலில் பொந்திக் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், மன்னர் சரபோஜி கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன் ஆகியோர் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று அந்த கோயிலில் உள்ள சோமகமலாம்பிகை என்றழைக்கப்படும் அம்மன் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டு தென் திசையில் உள்ள வீரநரசிம்மர் சிற்பத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சிற்றுருவத்தில் வீரன் ஒருவன் உடைவாளை உருவியபடி நின்ற நிலையில் உள்ள சிலையை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிலையின் தலை மீது சிவன் தனது வலது காலை ஊன்றியும், இடது காலை தன்னுடைய தலைக்குமேல் கொணடு வந்து வலது காதை தொடும் நிலையில் ஊர்த்துவ தாண்டவ காட்சி வடிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். 

இதுகுறித்து கோவிந்தராஜன், கண்ணதாசன் ஆகியோர் கூறியதாவது: திருநாவுக்கரசர் “நல்லருளால் திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்லவாறே“ என்று பாடியுள்ளார். இன்று அதை உறுதிப்படுத்தும் வகையில் அக்கோயில் பக்தர்களுக்கு திருவடி சாத்துவதற்கு அடையாளமாக சடாரி வைக்கப்படுவதை காணலாம். தமிழகத்தில் வேறு எந்த சைவக்கோயில்களிலும் இவ்வாறான நடைமுறை இல்லை. திருஞானசம்பந்தர் “கங்கை தங்கும் முடியாரவர் போலும், எங்களுச்சி யுறையுமிறையாரே“ என்று தன் பாடலில் சிவனின் திருவடியை தாங்கியதாக குறிப்பிடுகிறார்.


மாணிக்கவாசகர் திருவாசகத்தில் “சென்னிப்பத்து“ என்ற தலைப்பில் இறுதி இரண்டு அடிகளில் சிவனின் திருவடியை தலையில் தாங்கியதாக குறிப்பிடுகிறார். இவ்வாறாக 3 நாயன்மார்க ளும் சிவனின் பாதத்தை தங்களின் தலையில் தாங்கியதாக குறிப்பிடுகின்றனர். தென்திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கனின் தலையின்மேல் இரண்டு சிவலிங்கங்கள் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. பழையாறை அம்மன் சன்னதியின் அடித்தளங்கள் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தை சேர்ந்ததாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காண இயலாத இந்த சிவதாண்டவத்தை தாங்கும் வீரனின் சிற்பம் மூன்றாம் குலோத்துங்கனாக இருக்கலாம். இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

நன்றி : தினகரன் 24.1.2014 

Sunday 23 February 2014

நாகை காரோணமும், நாவுக்கரசர் கண்ட நடராஜரும்


கடுவையாறு வங்கக் கடலோடு கலக்குமிடத்தில் வணிகக்கப்பல்கள் வந்து செல்லும் ஊர் நாகப்பட்டினமாகும்.சங்க இலக்கியமான குறுந்தொகையில் இரண்டு பாடல்களைப் பாடிய நன்னாகையார் இவ் ஊரைச் சேர்ந்தவர் என்பர்
நாகை
சங்க காலத்திலும்,பல்லவர் காலத்திலும் இவ்வூர் நாகை என்ற பெயருடன் விளங்கியது.பல்லவர் ஆட்சியின் கீழ் இப்பகுதியிருந்துள்ளது. பல்லவர்கள் கல்வெட்டில் நாகை என்ற சொல்லாட்சி நாகநாதர் கோயிலில் முதல் முதலாக பொறிக்கப்பட்டுள்ளது என்பதை முனைவர் பா.ஜெயக்குமார் தமது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அக் கல்வெட்டு அக் கோயிலில் காணமுடியவில்லை, பல்லவர்களின் சமகாலத்து நாயன்மார்களும் தஙகள் தேவாரப் பாடல்களில்  

கலங்கள் சேர் கடல் நாகை, வங்கமலி கடனாகை 
என கடற்கரையை ஒட்டியுள்ள நாகையைக் குறிக்கும் விதத்தில் சுட்டுகினற்னர்.

பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் கல்வெட்டுகளில் சத்திரிய சிகாமணி 
வளநாட்டு பட்டினக்கூற்றத்து நாகப்படடினம்என்றும்,கெயமாணிக்க வளநாட்டு 
பட்டினக்கூற்றத்து நாகப்பட்டினமான சோழகுலவல்லி பட்டினம்எனவும்
பொறித்துள்ளனர். இக் கல்வெட்டுகளை நோக்கும் போது பல்லவர் காலத்தில் சிறு வணிகத்தலமாக விளங்கிய நாகை பல்நாட்டு வணிகர்களும் வந்து செல்லும் பட்டினமாகவும்,சமய, பண்பாட்டுத் தலமாகவும் விளங்கியது என்பதை உணரமுடிகிறது.

பாசுபத சைவம்
தமிழகத்தில் கச்சி, குடந்தை, நாகைக் காரோணங்களை நாயன்மார்கள் தங்கள் தேவாரப் பாடல்களில் போற்றியுள்ளனர். இத் தலங்கள் பாசுபத சைவர்களின் முக்கிய வழிபாட்டுகுரியனவாக திகழ்ந்துள்ளன. இங்கு சமணம், பௌத்தம், சைவம,வைணவம் பேன்ற பல சமயங்கள் சிறப்போடு விளங்கின.சமய மறுமலர்ச்சியினால் சமணம் சைவத்தினாலும்,பௌத்தம் வைணவத்தாலும் வீழ்ச்சியுற்றன. சமண,பௌத்த தடயங்களை இன்றும் இந்நகரங்களில் காணமுடிகின்றது. பாசுபத சைவம் நாகையில் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

நாகைக் காரோணர்
நாகை நகரின் மையத்தில் பெரியகோயில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படும் நாகை காரோணம் கோயில் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் திருநாவுக்கரசரும். ஞானசம்பந்தரும் கடல்நாகை காரோணத்தான் என்று இக் கோயிலில் குடிகொண்டுள்ள இறைவனை தம் பாடல்களில் பணிந்தேத்துகின்றனர்.முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் ஆட்சியாண்டினைக் குறிக்கும் கல்வெட்டுகளில் 
காரோணமுடைய மகாதேவர் என்றும். இவ்வரசர்களுக்குபின் ஆட்சிக்கு வந்தவர்கள் 
உடையார் திருக்காரோணமுடையார் என்றும் இறைவனைச் சுட்டியுள்ளனர்.  
சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாக நாகை காரோணம் உள்ளது. இங்கு இறைவன் சுந்தரவிடங்கராக எழுந்தருளியுள்ளார்.இவ்விடங்கரைக் கல்வெட்டுகளில் அழகவிடங்கர் எனக் குறிப்பிடுகின்றனர். காரோணம் என்ற நிலையில் பாசுபத சைவத்துடன் தொடர்புடையது இதன் முலம் அறியமுடிகின்றது. 

நடராஜர்
காரோணர் சன்னதியை அடுத்து தியாகராஜர் சன்னதியுள்ளது. அதன் சுவற்றில் வெளிச்சம் குறைந்த நிலையிலுள்ள சிற்பம் கண்ணையும்,கருத்தையும் கவருவதாகவுள்ளது. இதுபோன்ற சிற்பத்தினைத் தமிழகத்தில் காண்பது மிகவும் அரிது. அர்ச்சகரின் தீபஒளியில் மட்டுமே அச்சிற்பத்தினை காணமுடியும்.அச்சிற்பம் நடராஜர் சிற்பமாகும்.இதன் வலதுபுறம் ஜுரகரேஸ்வரர் சிற்பம் மகிச்சிறியளவில் உள்ளது. ஆடவல்லானின் ஆடலுக்கு இணையாக அம்மையும் ஆடுவதாகவும் வலதுகால் கீழாக முயலகனும் ஒருபுறம் வாணன் குடமுழா இசைக்க மறுபுறம் பூதகணங்கள் வாத்திய கருவிகளை கையாளுகின்ற காட்சியும் அமைந்துள்ளது.ஆடல் இறைவனின் தலைக்கு மேலாக இடதுபுறத்தில்  கங்காதேவியின் உருவமும் வலதுபுறத்தில் தட்சிணாமுர்த்திக்குரிய உருத்திராட்ச மாலையும்,பை மற்றும் மயிற்பீலியினாலான சாமரம் போன்றவையும்
வடிக்கப்பட்டுள்ளதால்(உயர்ந்த பாசுபத விரதம் ஞானம் எனப்படும், சிவன் யோகஆசிரியனாக ஞானத்தை வழங்கும் குருவாகவிளங்குகிறார் என ம,இராசமாணிக்கனார் தமது நுலில் குறித்துள்ளார்) இப்பகுதியானது தட்சிணாமூர்த்தியைக்குறிப்பதாக வடிக்கப்பட்டுள்ளது.இச்சிற்பத் தொகுதியை நோக்கும்போது அது சோழர் காலத்தைச் சேர்ந்ததாக அறியமுடிகின்றது.இதனை வடிப்பதற்குக் காரணமாக அமைவது நாவுக்கரசர் நாகையில் கண்ட நடராஜரின் 
ஆடல்காட்சியாகும். அக்காட்சியை அவர் தம்முடைய திருவாக்கினால் 

நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ்சூடி
மறையொலி பாடியாடன் மயானத்து மகிழ்ந்தமைந்தன்
கறைமலி கடல்சூழ்நாகைக் காரோணங் கோயில்கொண்ட
இறைவனை நாளுமேத்த விடும்பைபோ யின்பமாமே.
என்று சுட்டுகின்றார்.

நாகை காரோணத்தில் மற்றவர் காணிக்கை
தஞ்சை பெரியகோயிலில் மாமன்னன் முதலாம் இராஜராஜனின் ஆட்சிகாலத்தில் மற்றவர்கள் தெய்வத்திருமேனிகளை செய்தளித்தது போல் நாகை காரோணத்திலும் பல சோழர் கால அரசியல் தலைவர்கள் தங்கள் பங்களிப்பாக பல தெய்வத்திருமேனிகளை செய்தளித்ததுள்ளனர். அவைஅழகவிடங்கர், அர்த்தநாரி, ஆடவல்லான். 
தட்சிணாமுர்த்தி போன்றவையாகும். இச் சிற்பங்களைப்  பற்றி 
கல்வெட்டுகளும்,தேவாரமும் புகழ்ந்து பேசுகின்றன.

முதலாம் இராஜராஜனும்,முதலாம் இராஜேந்தினும்
இக் கோயிலின் மூலவர் கருவறையின் அருகில் உள்ள வெளிப்பிரகாரத்தில் காணப்படும் தட்சிணாமுர்த்தி கோட்டத்தில் இருபக்கங்களிலும் அழகிய அரசர்களின் உருவத்தோற்றத்துடன் கைகளில் மலர்ஏந்தி நின்ற நிலையில் காட்சியளிகின்றனர். அவர்களில் இக் கோட்டத்தின் வலது பக்கத்தில் உள்ளவர் சிற்பத் தோற்றத்தில் ஆடையானது அலங்காரமின்றி எளிய உருவில் காணப்படுகின்றார். மேலும் கோட்டத்தின் இடது பக்கத்தில் உள்ளவர் அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய ஆடையுடன் காணப் படுகின்றார். இக் கோயிலில் காணப்படும் பழமையான கல்வெட்டுகள் முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்தவையாகும். அதனடிப்படையில் நோக்கும் போது இவ்விரு சிற்பங்களும் அச் சோழஅரசர்களை குறிப்பதாக உள்ளதை உணரமுடிகின்றது.

பலல்வர் காலத்தில் நாவுக்கரசர் கண்ட நடராஜர் திருவுருவம் சோழ அரசர்களால் பாசுபதசைவத்துடன தொடர்புபடுத்தப்பட்டதை இதன் மூலம் அறிய முடிகின்றது. இச்சிற்பத்தில் ஆடவல்லான், கங்காதரர் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகிய   மூன்று  திருவுருவங்களும் ஒரே வடிவாகக் காணப்படுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இவ்வாறாக மூன்று திருவுருவங்களும் ஒருங்கே அமைந்த சிற்பத்தைத் தமிழகத்தில் எங்கும் காண்பது அரிதாகும். அத்தகு பெருமையினை நாகைக்கோரணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Friday 21 February 2014

சிவன் கோவிலில் ராஜராஜன் சதய விழா சிற்ப காட்சி: ஆய்வாளர்கள் புது தகவல்

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், திருப்புகலூர் சிவன் கோவிலில், தஞ்சையை ஆண்ட சோழமன்னன் முதலாம் ராஜராஜனும், அவனுடைய பட்டத்தரசிகளில் ஒருவருமான பஞ்சவன் மாதேவி சதய திருநாளில் அஸ்திரதேவரும், திருவிழா எழுந்தருளும் திருமேனிக்கும் அபிஷேகம் செய்ய கலசம் கொடுத்த சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்புகலூரில் பஞ்சவன்மாதேவி ராஜராஜன் சதய விழா சிற்பக்காட்சி
இச்சிற்பத்தை பொந்தியாகுளம் தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், தஞ்சை சரபோஜி கல்லூரி பேராசிரியர் கண்ணதாசன் ஆகியோர் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது. தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜன் மெய்கீர்த்தியுடன் துவங்கும், 16வது ஆட்சியாண்டு கல்வெட்டின் மூலம், "ஸ்ரீ ராசராசன் மகாதேவியார், நம்பிராட்டியார் நக்கன் தில்லையழகியான பஞ்சவன் மாதேவியார் தாமும், ஸ்ரீ ராசராச தேவரும் பிறந்தருளிய சதயம்தோறும், தீர்த்தமான நிலம் கொடுத்ததும், சித்திரை சதயத்தை தவிர பிற, 11 மாதங்களில் வரும் சதயத்துக்கு, 108 கலசம் கொடுத்ததும்' அறிய முடிகிறது. இதற்காக, புண்ணியாகம் செய்ய அக்காலத்தில், ஒன்பது பேர் இருந்துள்ளனர் என்பதும், அவர்களில் ஒருவர் புண்ணியாகம் செய்ய நின்ற நிலையிலும், அவரை அடுத்து, எட்டு பேர் நிற்பதாகவும் கல்வெட்டு தகவல்கள் மற்றும் சிற்பம் மூலம் தெரிய வருகிறது. இத்தகைய காட்சியை இப்போதும் காண்பவர், உணரும் வகையில், சிற்ப வடிவத்தில் வடித்துள்ளது தான் பெரும் சிறப்பு. சிற்ப காட்சியில், பஞ்சவன் மாதேவியும், அவருடைய கணவரான முதலாம் ராசராசன், கலசத்தை இரு கையால் தாங்கி, வழங்குவது போலவும், புண்ணியாகம் செய்பவர்களில் முதன்மையானவர் கையில் கெண்டியும், ஒரு கை சின் முத்திரையும் தாங்கி மந்திரம் கூறுவது போலவும், அவருக்கு பின்புறத்தில், அட்டமங்கலம் ஏந்தும் எட்டு பேர்களும் இருப்பது போலவும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜன் சதய திருவிழாவை தனது ஆட்சிக்காலத்தில் நடத்தியதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து, கூறி வந்துள்ளனர். அம்மன்னன் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால், சதய திருவிழா என்னும் பெயரில் அமைந்த விழா, தொன்று, தொட்டு, தற்போதும் தஞ்சை பெரியகோவிலில் நடக்கிறது. இத்தகைய விழாவை தனது ஆட்சிக்காலத்தில் ராஜராஜன் வெகு சிறப்பாக நடத்தியது, மேற்கண்ட சிற்ப காட்சி மூலம் தற்போது, மேலும் உறுதிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி : 18.12.2013 தினமலர்